மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீர்வரத்து அதிகரிப்பு
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, கேரளாவை ஒட்டி அமைந்துள்ள தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
கடந்த சில மாதங்களாக நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியைப் பார்வையிட மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். குளிக்க அனுமதி இல்லாததால் அவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்து நான்கு நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக, தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் அளவுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், கடந்த நான்கு நாட்களாகத் தேனி மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.