தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் ரூ.16,000கோடியில் ஆண்டுக்கு 1.50லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதன் படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு இந்த தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1119.67கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டது. முதற்கட்ட கார் உற்பத்திக்கான பணிகள் நிறைவடைந்த நிலையில் VF-6, VF-7 ஆகிய வகை கார்கள் விற்பனைக்குக் தயாராகவுள்ளன. இந்த ஆலையில் முதற்கட்டமாக ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களுற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதற்காக இன்று காலை தூத்துக்குடி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல் கார் விற்பனை விழாவையும் தொடங்கி வைத்தார். இங்கு தயாரிக்கப்பட்ட முதல் காரில் முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர் ராதாகிருஷ்ணன், வின்பாஸ்ட் கார் நிறுவன நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.