இந்தியாவில் தஞ்சமடைந்து வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “நான் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் என் மக்களை விட்டு ஒருபோதும் பிரிந்ததில்லை” என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தெற்காசிய வெளிநாட்டு செய்தியாளர்கள் கழகம் (Foreign Correspondents Club of South Asia) ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய ஷேக் ஹசீனா, கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேசத்தின் நிலை குறித்து வேதனையுடன் பேசினார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளாக என் அன்பு வங்கதேசம் துயரத்தில் இருப்பதை பார்த்து வருகிறேன். 1971-ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் 30 லட்சம் பேர் உயிர்தியாகம் செய்து உருவாக்கிய வங்கதேசம் இதுவல்ல” என்று அவர் உருக்கமாகக் கூறினார்.
2024-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து பேசிய அவர், “அது அமைதியான மாணவர் போராட்டம் அல்ல. ஆரம்பத்தில் மாணவர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகள் மூலம் தீர்க்க அரசு முயன்றது. ஆனால் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் மாணவர் போராட்டத்தை வன்முறையான அரசியல் ஆயுதமாக மாற்றின. இறுதியில் என் ராஜினாமாவை மட்டுமே கோரும் இயக்கமாக அது மாறியது” என்று குற்றம்சாட்டினார்.
தனது தந்தை Sheikh Mujibur Rahman, குடும்பத்தினர் மற்றும் விடுதலைப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூர்ந்தபோது ஷேக் ஹசீனா பலமுறை உணர்ச்சிவசப்பட்டார்.
2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி மாணவர் தலைமையிலான போராட்டத்தையடுத்து தனது 15 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அப்போது அதிகாரப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேற 30 முதல் 40 நிமிடங்கள் மட்டுமே அவகாசம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தன் மீது விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் பல்வேறு வழக்குகள் குறித்து, “மரண தண்டனையோ, பொய்யான வழக்குகளோ என்னை அச்சுறுத்த முடியாது. அவை அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள்” என்று கூறினார்.
வங்கதேசத்திற்கு எப்போது திரும்புவீர்கள் என்ற கேள்விக்கு, “அதற்கான நேரம் வரும்போது அறிவிப்பேன்” என்று ஷேக் ஹசீனா பதிலளித்தார்.
