வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுபெற்றது. மோன்தா என பெயரிடப்பட்ட புயல் தீவிர புயலாக வலுபெற்றதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அவசர கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதிகாலையில் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையின் அளவு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து, மாநகராட்சிக்குட்பட்ட கல்வாய்களில் நீர்மட்டம், ஆறுகள் கடலுடன் கலக்கும் முகத்துவாரத்தில் உள்ள நிலவரம் குறித்து 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. துணை முதல்வரின் ஆய்வின்போது,
கட்டுப்பாட்டு மையத்திற்கு சமுக வலைதளங்கள் மூலமாக வரப்பெற்ற புகார்களின் எண்ணிக்கை, புகார்களின் விவரங்கள், புகார்தாரர்கள் அனுப்பிய புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றையும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், நடவடிக்கை மேற்கொள்ள எடுத்துக் கொண்ட நேரம், சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுள்ளதா என்றும், அலுவலர்கள் புகாரை சரிசெய்ய எடுத்துக் கொண்ட காலஅளவு குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டார் என தெரிவிக்கப்படுள்ளது.
