குரூப் 2 மற்றும் 2ஏ ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு 2-க்கு, கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பங்களை பெற்றது.
தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு 5 லட்சத்து 53 ஆயிரத்து 635 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் ஒருவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ளவர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 495 ஆண்களும், 3 லட்சத்து 41 ஆயிரத்து 114 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 25 பேர் ஆவர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் கோபாலசுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-2 (தொகுதி II மற்றும் IIA பணிகள்)-ல் 625 காலிப்பணியிடங்கள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சார் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -II (தொகுதி II மற்றும் IIA) பணிகளுக்கான அறிவிப்பு தேர்வாணையத்தால் 15.7.2025 அன்று வெளியிடப்பட்டது. தற்போது 625 பிற்சேர்க்கை இன்று (18.11.2025) வெளியிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கப்பட்ட மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 1,270 ஆகும்.
ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) 2022-ம் ஆண்டு அறிவிக்கையில், ஐந்து நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும், 2024ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதி ஆண்டுகளுக்கான காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் ஏழு நிதியாண்டுகளுக்கு 8,784 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது. ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1,254 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1270 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2024 ஆண்டிற்கான அறிவிக்கைகளில் ஒரு நிதியாண்டிற்கு நிரப்பப்பட்ட காலிப்பணியிடங்களுடன் ஒப்பிடும்போது, 2025-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் கூடுதலாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத்துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.” என கூறியுள்ளார்.
