வளரும் கட்சிக்குள் கோஷ்டிகள் தலை தூக்குவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அந்த விதத்தில் விஜய்யின் தவெக-வுக்குள் அதற்குள்ளாகவே கோஷ்டி அரசியல் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிவிட்டது.
‘விஜய் மக்கள் இயக்கத்தை’ வழி நடத்திய புஸ்ஸி ஆனந்தை மட்டுமே மலைபோல் நம்பி தவெக என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலும் ஆனந்தை அமர்த்தினார். ஆனால், மன்றத்தை கட்டி இழுப்பது போல் கட்சியை அவரால் கட்டி இழுக்க முடியவில்லை. பணம் வாங்கிக் கொண்டு கட்சிப் பதவிகளை ‘விற்பதாக’ ஆங்காங்கே புகார்கள் வெடித்தன.
விஜய்க்கும் தங்களுக்கும் இடையில் தடுப்பு அரணாக இருப்பதாக ஆனந்த் மீது தொண்டர்கள் அதிருப்திகளைக் கொட்டினார்கள். இருந்த போதும் கட்சிப் பொறுப்பாளர்கள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டிலும் கண்ணசைவிலும் வைத்திருந்தார் ஆனந்த். இதனால் அவரை மீறி கட்சிக்குள் எதுவும் அசையாது என்ற நிலையே இருந்தது.
இந்த நிலையில் தான், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார் என அரசியலில் கரை கண்டவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வரிசையாக வந்து தவெக-வில் ஒட்டினார்கள். அவர்களுக்கு மாநிலப் பொறுப்புகளையும் தயங்காமல் வழங்கினார் விஜய். ஆனால், இவர்களெல்லாம் உள்ளே வந்த பிறகு கட்சிக்குள் ஆனந்தின் பிடி மெல்லத் தளர ஆரம்பித்தது.
