கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
56வது சர்வதேச திரைப்பட விழா கடந்த 20ம் தேதி கோவாவில் தொடங்கியது. விமர்சையாக நடைபெற்ற விழா இன்றுடன் (நவ. 28) நிறைவு பெற்றது. விழாவில் சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டன.
இந்தநிலையில், சர்வதேச திரைப்பட விழாவின் இறுதி நாளில், முன்னணி திரை நட்சத்திரங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. அதில், நடிகர் ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. திரைத்துறையில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் சினிமாவில் நடத்திய சாதனைகளுக்காக ரஜினிகாந்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தனக்கு விருது வழங்கி கவுரவித்த மத்திய அரசு மற்றும் கோவா அரசுக்கு நன்றி தெரிவித்தார். 50 ஆண்டுகள் திரைப்பயணம் வேகமாக ஓடிவிட்டதாக குறிப்பிட்ட ரஜினி, சினிமாவையும், நடிப்பையும் என்றும் விரும்புவதாக தெரிவித்தார். எத்தனை பிறவிகள் எடுத்தாலும் நடிகராகவே பிறக்க விரும்புவதாக ரஜினி கூறினார். தன்னை வாழ வைத்த தமிழக மக்கள் மற்றும் திரைத்துறையினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நன்றிகள் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
