மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ரூ.36,660 கோடி மதிப்பில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் இன்று (டிச. 7) நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதில், ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மொத்தம், 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம், ரூ.36,660.35 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளில், 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழி வகுத்துள்ளன.
அத்துடன், மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்படுகிறது. தொடர்ந்து 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டாக்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். முன்னதாக ரூ.150.28 கோடி மதிப்பில் மதுரை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.795 கோடி மதிப்பில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.8,668 கோடி மதிப்பில் 96.55 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.27,463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
