ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 240 இந்திய வீரர்கள் உட்பட 350 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனுக்கான வீரர்கள் ஏலம் வரும் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இந்நிலையில் ஏலத்துக்கான இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் 240 பேர், வெளிநாட்டு வீரர்கள் 110 பேர் என மொத்தம் 350 பேர் இடம் பெற்றுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயிண்டன் டி காக் கடைசி நேரத்தில் ஏலப்பட்டியலில் இணைந்துள்ளார். அவரது அடிப்படை விலை ரூ.1 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த ஏலத்துக்காக 1,390 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதன் பின்னர் இந்த பட்டியல் 1,055 பேர் கொண்டதாக சுருக்கப்பட்டது. இதில் இருந்து தற்போது 350 ஆக குறைக்கப்பட்டு இறுதிப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த 350 வீரர்களில் இருந்து 10 அணிகளின் உரிமையாளர்களும் ஒட்டுமொத்தமாக 77 பேரை ஏலம் எடுப்பார்கள்.
பிரித்வி ஷா 2018 முதல் 2024 வரை ஐபிஎல்லில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. இதனால் கடந்த சீசனில் அவரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. சர்பராஸ் கான் 2021-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள வெங்கடேஷ் ஐயரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆஸ்திரேலியாவைச் சேந்த ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்கர்க், ஜோஷ் இங்லிஷ், மேத்யூ ஷார்ட், கூப்பர் கானொலி, பியூ வெப்ஸ்டர் உள்ளிட்ட 19 பேரும் இடம் பெற்றுள்ளனர். இதில் கேமரூன் கிரீன், ஜேக் பிரேஸர் மெக்கர்க் ஆகியோரது அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளை சேர்ந்த அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், அக்கீம் அகஸ்தே, ஷாய் ஹோப், ராஸ்டன் சேஸ் உள்ளிட்ட 9 வீரர்களும் ஏலப்பட்டியலில் உள்ளனர்.
இலங்கையை சேர்ந்த வனிந்து ஹசரங்கா, துனித் வெல்லாலகே, தீக் ஷனா, டிரவீன் மேத்யூ, பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரேரா உள்ளிட்ட 12 வீர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வீரர்களை ஏலம் எடுக்க உள்ள அணிகளில் அதிகபட்சமாக 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.64.3 கோடியை இருப்பு வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.43.4 கோடியையும், 2016-ம் ஆண்டு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ரூ.25.5 கோடியையும் இருப்பு வைத்துள்ளன.
