சிலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு சிறிய விஷயமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலை உணவு சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அதை உங்கள் அன்றாட வாழ்க்கையிலிருந்து நீக்கினாலோ, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்.
ஆரோக்கியமான காலை உணவை உண்பது நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது நாள் முழுவதும் வேலை செய்வதற்கும் கடினமாக உழைப்பதற்கும் உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது, இதனால் வேலை செய்யும் போது உங்கள் உடல் சோர்வடைவதில்லை.
2018 ஆம் ஆண்டில் ‘ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஒரு நபர் தனது காலை உணவைத் தவிர்த்தாலோ அல்லது தனது அன்றாட வாழ்க்கையிலிருந்து நீக்கினாலோ, காலையில் சரியான காலை உணவை உண்ணும் நபருடன் ஒப்பிடும்போது அவருக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 33 சதவீதம் அதிகமாக உள்ளது. காலை உணவு உண்ணும் மக்களின் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு இரண்டும் சமநிலையில் இருப்பதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.
காலை உணவை உங்கள் தினசரி வாழ்க்கை முறையிலிருந்து நீக்குவது, உடலுக்கு பல தீங்கு விளைவிக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்; அவை காலப்போக்கில் பெரிய பிரச்சனைகளாக மாறக்கூடும். இதில் பொதுவாகக் காணப்படும் முக்கிய பிரச்சனை ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதாகும்.
ஒருவர் ஏதேனும் காரணத்தால் அடிக்கடி காலை உணவை தவிர்த்தால் அல்லது மறந்துவிட்டால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு உணவு உண்பதால், உணவின் அளவும் அதிகமாகிறது. இதன் காரணமாக ரத்தச் சர்க்கரை திடீரென உயர்கிறது. இந்த நடைமுறை மீண்டும் மீண்டும் அல்லது நீண்ட காலம் தொடர்ந்தால், உடலின் ரத்தச் சர்க்கரை கட்டுப்படுத்தும் திறன் குறைந்து, நீரிழிவு போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம்.
காலை உணவு சாப்பிடுவது நமது உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் பல நல்ல விளைவுகளை அளிக்கிறது. அதில் மிக முக்கியமானது அது வழங்கும் ஆற்றல் ஆகும். காலை உணவு, மனதாலும் உடலாலும் நாள் முழுவதும் செய்ய வேண்டிய பணிகளைச் சிறப்பாக செய்ய உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது.
காலையில் சத்தான காலை உணவையோ அல்லது உலர் பழங்களையோ (நட்ஸ்) எடுத்துக்கொண்டால், அதில் உள்ள தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் உடல்நலத்திற்கு மிகுந்த பயனளிக்கின்றன. இவை மனதைத் தெளிவாகவும் வலுவாகவும் வைத்துக் கொண்டு, உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகின்றன.
