அசாம் மாநிலத்தில் மூண்ட கலவரத்தில் இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கர்பி பழங்குடியினரின் அமைப்புகளின் தன்னாட்சி கவுன்சில் எல்லைக்கு உட்பட்ட அரசு மேய்ச்சல் நிலங்களில் பிஹார் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த பலர் குடியேறி உள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கர்பி பழங்குடியினத்தவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கு கர்பி ஆங்லாங்கின் பெலங்பி என்ற பகுதியில் கடந்த 2 வாரங்களாக பழங்குடியினர் 9 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை அவர்களை மருத்துவ சிகிச்சைக்காக போலீஸார் வலுக்கட்டாயமாக குவாஹாட்டிக்கு அழைத்துச் சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பழங்குடியினத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 2-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது.
கர்பி பகுதிகளில் இருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். கடைகளில் இருந்து சமையல் காஸ் சிலிண்டர்களை வெளியில் போட்டு வெடிக்க செய்தனர். கலவரத்தை அடக்க வந்த போலீஸார் மீது அம்புகள் எய்தனர். கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயற்சித்தனர். இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கலவரம் பெரிதானதால், கர்பி ஆங்லாங் மற்றும் மேற்கு கர்பி ஆங்லாங் ஆகிய 2 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டது.
