மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 2ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் இன்று அக்கட்சியினர் அமைதி பேரணி சென்றனர்.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. அவரது நினைவிடத்திற்கு பலரும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர்.
மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு குருபூஜையையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொருளாளர் சுதீஷ் இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

(துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய காட்சி)
(தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை அஞ்சலி செலுத்திய காட்சி)
இதேபோல், , பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் 2-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. கோயம்பேடு அம்பேத்கர் சிலையில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை தே.மு.தி.க.வினர் பேரணியாக சென்றனர். அமைதி பேரணியில் ஆயிரக்கணக்கான தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியாக வந்து விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா அஞ்சலி செலுத்தினர்.
