விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் அஜித்தின் மங்காத்தா படம் ரீரிலிஸ் செய்யப்படவுள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பெரும் கவனத்தை பெற்றுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த தணிக்கை வாரியம் , அந்த படத்தை மறுஆய்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பியது. இதனை எதிர்த்து, படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தனி நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் விரிவாக கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பிய தணிக்கை வாரிய உத்தரவை ரத்து செய்தார். மேலும், திரைப்படத்திற்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு தயாரிப்பு நிறுவனம் மற்றும் படக்குழுவுக்கு நிவாரணமாக அமைந்தது.
ஆனால், இந்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவதா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து அவசரமாக மேல்முறையீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும், பதில் மனு தாக்கல் செய்யும் முன்பே நீதிபதி சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதாகவும் வாதிட்டார்.
மேலும், மறுஆய்வு உத்தரவை ரத்து செய்ய கோரப்படாத நிலையில், அந்த உத்தரவும் ரத்தானது எனக் குறிப்பிட்டார். டிசம்பர் 22-ஆம் தேதியே தணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர தாமதம் செய்தது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் தயாரிப்பு நிறுவனத்திடம் சில கேள்விகளை எழுப்பினர். தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு முன்பே வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன் என்றும், சான்றிதழ் இல்லாமல் திரைப்படத்தை வெளியிடுவது எப்படி சாத்தியம் என்றும் கேட்டனர்.
குறிப்பிட்ட தேதியை நிர்ணயித்துவிட்டு நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்க முடியாது என்றும், பல்வேறு சட்ட நடைமுறைகள் இருக்கும் போது சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இதன் காரணமாக, ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என்பது உறுதியாகியுள்ளது.
இருப்பினும், அரசியல் களத்தில் திமுக அரசை விமர்சித்து வரும் விஜய் நடித்துள்ள படத்துக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனநாயகன் ரிலீஸ் தாமதமாகிக்கொண்டே உள்ளது. இந்தநிலையில், நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படம் வரும் 23ம் தேதி ரீரிலிஸ் ஆகவுள்ளது. அஜித் குமாரின் 2011 ஆம் ஆண்டு வெளியான மங்காத்தா திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் முன்னதாக அறிவித்தது. பல வாரங்களுக்கு பிறகு மறுவெளியீடு குறித்த இந்தச் செய்தியை தயாரிப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியது, இது 2026 ஆம் ஆண்டின் முதல் மறுவெளியீடுகளில் ஒன்றாகும்.
ஒருவேளை ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் தொடர்பான பிரச்சனை சரியானால், அந்த படமும் 23ம் தேதியே வெளியாக வாய்ப்புள்ளது. இப்படி நடந்தால் வாரிசு – துணிவு படங்களுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. 2023 க்கு முன்பே, விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் 10 முறைக்கு மேல் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளன.
