டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்குகிறது, இருப்பினும், இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெறவில்லை. இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக கில் இருக்கும் நிலையில், இது மேலும் விவாதப்பொருளாக மாறியது. இந்தநிலையில், டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு ஷுப்மன் கில் தனது முதல் எதிர்வினையைத் தெரிவித்துள்ளார்.
அதாவது, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை( ஜனவரி 11ஆம் தேதி) தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் சுப்மன் கில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார். இதற்காக, தேர்வாளர்கள் மீது தனது மரியாதையை வெளிப்படுத்தியதுடன், உலகக் கோப்பை அணிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அணியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்பு, ஷுப்மன் கில் டி20 அணியின் துணை கேப்டனாக இருந்தார், ஆனால் தற்போது அந்தப் பொறுப்பு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கவுள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஷுப்மன் கில், “என் வாழ்க்கையில் நான் இருக்க வேண்டிய இடத்தில்தான் இப்போது இருக்கிறேன் என்று நினைக்கிறேன். என் விதியில் எழுதப்பட்டதை எதுவும் என்னிடமிருந்து பறிக்க முடியாது என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஒரு வீரராக, நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள் என்றும், உங்கள் அணிக்கும் நாட்டுக்கும் வெற்றி பெற்றுத் தருவீர்கள் என்றும் நம்பிக்கை வைத்திருப்பதே முக்கியம்.”
மேலும், “தேர்வாளர்களின் முடிவை நான் மதிக்கிறேன். அவர்களின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். டி20 அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் நமக்காக உலகக் கோப்பையை வெல்வார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
ஷுப்மன் கில் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டி20 போட்டியில் விளையாடினார். அந்தத் தொடரில், கில் மூன்று இன்னிங்ஸ்களில் 32 ரன்கள் மட்டுமே எடுத்தார், ஒருமுறை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஐந்தாவது டி20 போட்டியில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். சாம்சன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
