கரூர் விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சம்பவம் தொடர்பாக விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரசார வாகனம் எடுத்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அதனை சிபிஐ அதிகாரிகள் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, நாளை (ஜன.12 ஆம் தேதி) விஜய் டெல்லியில் சிபிஐ அதிகாரிகளை நேரில் சந்திக்க இருக்கிறார்.
அதாவது, கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு விஜய் ஆஜராகவுள்ளார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று அவர் டெல்லி புறப்படுவதாக முதலில் கூறப்பட்டது. இந்தநிலையில் நாளை காலை 7 மணிக்கு அவர் புறப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், இந்த விவகாரத்தில் விஜய்க்கு அனுப்பப்பட்ட சிபிஐ-யின் சம்மன் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய்க்கு BNSS 179 பிரிவின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால், விஜய் குற்றம் செய்த நபர் இல்லை. ஆனால், குற்றம் நடந்த விதம், குற்றம் தொடர்பான தகவல் விஜய்க்கு தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், அவர் நீதிமன்றத்தை நாடாமல் நாளை காலை சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
