சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொளத்தூரை சேர்ந்த ஆதி என்ற ஆதிகேசவன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆதி ரவுடி பட்டியலிலும் இருந்துள்ளார். இந்த நிலையில் ஆதியின் தோழியான சுசித்ராவுக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்துள்ளது.
பிற்நத உடனே சுசித்ராவின் பெண் குழந்தை இறந்துள்ளது. இதற்காக தனது தோழியை சந்தித்து ஆறுதல் கூற கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஆதி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன் தினம் இரவு மருத்துவமனையிலேயே ஆதி தங்கியுள்ளார். இந்த நிலையில்தான் நேற்று அதிகாலை 3.45 மணிக்கு திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் தூங்கிக் கொண்டிருந்த ஆதியை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆதி அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார் ஆதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அலிபாய், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை மேலும் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ரவுடி கொலை தொடர்பாக பணியில் இருந்த 3 பெண் போலீசார் உட்பட 4 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், உதவி ஆணையர் துரை ஆகியோருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
