மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தூருக்கு வருகை தந்துள்ளார். அவர் முதலில் பம்பாய் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு நோயாளிகளைச் சந்தித்து, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவர்களது குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். பின்னர், அசுத்தமான நீரால் பாதிக்கப்பட்ட பகுதியான பகீரத்புராவிற்கு ராகுல் காந்தி சென்றார். எதிர்க்கட்சித் தலைவர் உமங் சிங்ஹார், மாநிலத் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் மாநிலப் பொறுப்பாளர் ஹரீஷ் சௌத்ரி ஆகியோரும் அவருடன் இருந்தனர்.
இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மத்திய அரசின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். ராகுல் காந்தி கூறியதாவது, “எங்களுக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டி வாக்குறுதி அளிக்கப்பட்டது. இது ஒரு புதிய ஸ்மார்ட் சிட்டி மாதிரி. இங்கு குடிநீர் இல்லை, மக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்தூரில் அசுத்தமான நீரைக் குடித்ததால் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதுதான் இந்த அரசாங்கத்தின் நகர்ப்புற மாடல்?. இது இந்தூருடன் மட்டும் நின்றுவிடவில்லை; நாடு முழுவதும் பல நகரங்களில் இதே நிலைதான் உள்ளது என்று விமர்சித்தார்.
இந்த விவகாரத்திற்கு அரசாங்கத்தில் உள்ள ஒருவர் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த அலட்சியத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இன்றளவும், இந்தூர் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை. அரசாங்கத்தின் கடமையான ஒரு முறையான மற்றும் நம்பகமான சுத்தமான குடிநீர் அமைப்பைத்தான் மக்கள் கோருகிறார்கள். மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மக்களின் பிரச்சினைகளை எழுப்புவது எனது பொறுப்பு என்று அவர் கூறினார். இதை அரசியல் என்றோ அல்லது வேறு எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
பாகீரத்புராவில் அசுத்தமான குடிநீரால் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், எட்டு முதல் பத்து நோயாளிகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார்.
