பிரபல நடிகையும், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா அரசியலில் இருந்து விலகுவதாக சமூகவலைத் தளங்களில் தகவல் பரவிய நிலையில் அதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஆந்திர அரசைக் கடுமையாக விமர்சிக்கும் போதெல்லாம், என்னைக் கைது செய்யப் போகிறார்கள் என்ற செய்தியைப் பரப்புகிறார்கள். கைதுக்கு பயந்து நான் அரசியலை விட்டு விலகப் போவதாகக் கூறுவது முற்றிலும் தவறு. எதையும் எதிர்கொள்ளும் துணிவுடன் தான் நான் அரசியலுக்கு வந்தேன்.
தான் மீண்டும் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து எழும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், “அமைச்சர் பதவியில் இருந்தபோது நடிப்பைத் தவிர்த்தேன். இப்போது கட்சிப் பதவியில் மட்டுமே இருப்பதால் தொடர்ந்து நடிக்கிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை” என்றார்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணைச் சுட்டிக்காட்டி ரோஜா எழுப்பிய கேள்வி அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது:”துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அரசியலில் இருந்துகொண்டே சினிமாவிலும் நடிக்கிறார். ஆனால் அவரைப் பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை. நான் ஒரு பெண் என்பதால் மட்டுமே இதுபோன்ற விமர்சனங்களை முன்வைக்கிறார்கள்” என்று கடுமையான கருத்தை தெரிவித்தார்.
