ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றாமல் ஆளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து மக்கள் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
- ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டதாகவும், ஆளுநர் பேச அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆளுநர் உரையில் ஆதாரமற்ற தவறான பல தகவல்கள் இருந்ததாகவும், மக்கள் பிரச்சனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.12 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளை தமிழக அரசு ஈர்த்துள்ளதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் உள்ளதாகவும், 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை, அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் தமிழ்நாடு 4வது பெரிய மாநிலமாக இருந்ததாகவும், தற்போது 6வது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடுவதாகவும் கூறப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55%, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் 33% அதிகரித்த போதிலும், தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- பள்ளி மாணவர்கள் உள்பட இளைஞர்களிடையே போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள மக்கள் மாளிகை, போதைப்பொருள் பழக்கத்தால் ஒரே ஆண்டில் 2000-க்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
- தலித்துகளுக்கு எதிரான கொடுமைகளும், தலித் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையும் கடுமையாக அதிகரித்து வரும்நிலையில், உரையில் அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்றும், தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்று குறிப்பிடப்படுவதாகவும், ஆனாலும், இது அரசுக்கு ஒரு கவலையாகத் தெரியவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கல்வித் தரத்தில் தொடர் சரிவைக் கண்டு இளைஞர்கள் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 50% ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளதாகவும் மக்கள் மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பல ஆண்டுகளாகத் தேர்தல்கள் நடத்தப்படாததால், பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் செயல்படாமல் உள்ளதாகவும் இதுகுறித்து தமிழ்நாடு அரசு வழங்கிய உரையில் ஒரு குறிப்பு கூட இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் கோயில்கள் அறங்காவலர் குழுக்கள் இல்லாமல், மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுவதாகவும், கோயில்களின் தவறான நிர்வாகத்தால் கோடிக்கணக்கான பக்தர்கள் மிகுந்த மனவேதனையும் விரக்தியும் அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிப்பட்டுள்ளது.
- சிறு குறு தொழில்துறைகள் பெரும் அழுத்தத்தில் உள்ளன. நாட்டில் 5.5 கோடிக்கும் அதிகமாக MSME நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்ட போதிலும், தமிழகத்தில் 40 லட்சம் நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் தங்களின் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் நிறுவும் கட்டாயத்தில் உள்ளனர். இந்த தகவல்கள் இல்லை என்றும் மக்கள் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே அதிருப்தி நிலவுவதாகவும், அவர்கள் பதற்றத்துடனும், விரக்தியுடனும் இருப்பதாகவும் அவர்களின் குறைகளைத் தீர்க்க வழிமுறைகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
- தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளது மற்றும் அடிப்படை அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
