நேற்று அமைச்சர் சேகர் பாபு ஓபிஎஸ்-ஐ சந்தித்த நிலையில், கூட்டணி தொடர்பாக அவர் வைத்த கோரிக்கைகளுக்கு திமுக பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க தமிழக தேர்தல் களம் பெரும் பரபரப்பாக உள்ளது. அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திம் ஆதரவாளர்கள் சிலர் அவரை தனிமரமாக்கிவிட்டு மற்ற கட்சிகளில் இணைந்துவிட்டனர்.
இதனை பயன்படுத்திக்கொண்ட திமுகவினரும், ஓ.பன்னீர் செல்வத்தையும் தங்கள் கூட்டணிக்கு இழுக்க பல பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதாகவும் தெரிகிறது. ஒருபுறம் பாஜக-அதிமுக கூட்டணியில் பிரேமலதாவை இழுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என கருதி திமுகவும் ஓ.பி.எஸ்.ஐ இழுக்க முயற்சிகளை எடுத்து வருகிறது.
இப்படியிருக்கையில் தான், நேற்று அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதில் சட்டமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், திமுகவில் இணைய வேண்டும் என்றால் சில கோரிக்கைகளை ஓ.பன்னீர் செல்வம் முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது ஆதரவாளர்கள் வெல்லமண்டி நடராஜன், எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கு தேர்தலில் போட்டியிட 2 சீட்டுகளும், மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா சீட்டும் தருமாறு கோரினாராம். ஓபிஎஸ் இணைந்தால் தென் மாவட்டங்களில் கூட்டணி பலப்படும் என்ற நோக்கில் அவரது கோரிக்கைகளுக்கு திமுகவும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
