இன்று நிகழ்ந்த விமான விபத்தில் மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையிலிருந்து பாராமதிக்குச் சென்ற ஒரு சிறிய விமானம், புதன்கிழமை காலை தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த விபத்தில் சதி நடந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், நாட்டில் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களிடம் பேசிய பானர்ஜி, இந்தச் சம்பவத்தை நாட்டிற்கு ஏற்பட்ட ஒரு பெரும் இழப்பு என்றார்.
என்.டி.ஏ.வில் இருந்து அஜித் பவார், வெளியேறவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருவதை சுட்டிக்காட்டி பேசிய மம்தா, இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும்,”எங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை உள்ளது, வேறு எந்த அமைப்பின் மீதும் இல்லை,” என்று கூறிய பானர்ஜி, விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இதேபோல், மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உட்பட ஐந்து பேர் உயிரிழந்த பாராமதி விமான விபத்து குறித்து முறையான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய், ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
