அஜித் பவார் மறைவையடுத்து மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகாராஷ்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதல்வர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தநிலையில், மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பதவியேற்றுள்ளார்.
இன்று சனிக்கிழமை மும்பையில் உள்ள விதான் சபாவில் நடந்த சட்டமன்ற கட்சி கூட்டத்தில் அவர் என்சிபி சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றே துணை முதலமைச்சராக பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.
சுனேத்ரா பவார் 1963ஆம் ஆண்டு தராஷிவ் மாவட்டத்தில் மராத்தா குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே அரசியல் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை பாஜிராவ் பாட்டில் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தார். 1980களில் அவரது சகோதரர் பதம்சிங் பாஜிராவ் பாட்டில் மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்கு பெற்றார். சுனேத்ரா பவார் 1983இல் ஆரங்காபாத்தில் உள்ள எஸ்.பி.ஆர்ட்ஸ் அண்ட் காமர்ஸ் கல்லூரியில் வணிக இளங்கலைப் பட்டம் பெற்றார். 1985 டிசம்பரில் அஜித் பவாரை திருமணம் செய்து கொண்டார்.
சுனேத்ரா பவாரின் நிதி நிலை குறித்து 2024 லோக்சபா தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் 2022-23 நிதியாண்டில் அவரது மொத்த வருமானம் ரூ.4,22,21,010 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமதி அக்ரோ லிமிடெட், வெங்கீஸ் (இந்தியா) லிமிடெட் போன்ற நிறுவனங்களில் பங்குகள் மற்றும் பத்திரங்கள் அவரிடம் உள்ளன. இவை அவரது கணவர் அஜித் பவாருடன் இணைந்து நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடையவை.
அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்த பிறகு, சுனேத்ரா பவார் அரசியல் அரங்கில் நுழைந்துள்ளார். அவரது பதவியேற்பு மகாராஷ்டிரா அரசியலில் பெண்களின் பங்கு அதிகரிக்கும் சிக்னலாக பார்க்கப்படுகிறது. என்சிபி கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள அவர், கட்சியின் எதிர்கால திட்டங்களை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
https://x.com/narendramodi/status/2017567810797596961?
இந்தநிலையில், மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்ற அவரது மனைவி சுனேத்ரா பவாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில், “சுனேத்ரா பவார் அவர்கள் இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் ஆவார். அவர் மாநில மக்களின் நலனுக்காக முழு ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவார் என்றும், மறைந்த அஜித் தாதா பவாரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
