பிரதமர் நரேந்திர மோடியின் வரவிருக்கும் ஆஸ்திரேலியா பயணத்திற்கு முன்பாக, அவருக்கு சமூக வலைதளத்தில் மரண மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
தி ஆஸ்திரேலியா டுடே” வெளியிட்ட தகவலின்படி, மெல்போர்னில் நடைபெறவுள்ள “Melbourne Meets Modi” என்ற சமூக நிகழ்வை பற்றிய பேஸ்புக் பதிவின் கீழ் இந்த மிரட்டல் கருத்து இடப்பட்டுள்ளது.
அந்த நிகழ்வு ஜூலை 9ஆம் தேதி மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
“Abu Mustafa” என்ற பெயரில் உள்ள கணக்கில் இருந்து இந்த மிரட்டல் பதிவிடப்பட்டதாகவும், அதில் ஸ்டேடியத்தின் கூரை திறந்திருந்தால் மோடி அந்த நிகழ்வுக்காக ஆஸ்திரேலியாவுக்கு வருவது அவரின் மரணமாக இருக்கலாம்” என கூறப்பட்டிருந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.
இந்த பதிவின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
தகவலின்படி, அந்த பதிவுடன் தொடர்புடைய IP முகவரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என ஆஸ்திரேலிய கூட்டாட்சி போலீஸ் (AFP) செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளது.
