ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளுக்கு முன்பு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு எல்பிஜி சிலிண்டர்களுக்கான ரொக்கம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.
டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் அரசு தற்போது செயல்பட்டு வருகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும், ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின் போது தலா ஒரு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வாக்குறுதி அளித்திருந்தது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி, எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி (AAP) பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை என்பதைக் குறிப்பிட்டு AAP, அரசை குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஆளும் பாஜக, ரேஷன் அட்டைதாரர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு முடிந்த பிறகே நிதி உதவி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தலைநகர் டெல்லியில், ஒரு எல்பிஜி சிலிண்டரின் தற்போதைய விலையான ரூ.853, ஹோலி பண்டிகைக்கு முன்பாக ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்றும், இதேபோல் தீபாவளிக்கு முன்பாக அப்போதைய எல்பிஜி விலையின் அடிப்படையில் மற்றொரு தொகை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரேகா குப்தா நேற்று அறிவித்துள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரேகா, டெல்லியில் உள்ள சுமார் 17.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இந்த நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தால் பயனடைவார்கள் என்றும் டெல்லி அரசாங்கம் தனது அனைத்து வாக்குறுதிகளையும் படிப்படியாக நிஜமாக்கி வருகிறது என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி குறித்து அவர் குறிப்பிடவில்லை.
மேலும், எல்பிஜி விலையில் ஏற்படும் மாற்றங்கள், மத்திய அரசின் மானியங்கள் மற்றும் பயனாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சரிசெய்யப்படும் நேரடி நிதி பரிமாற்ற (DBT) திட்டத்திற்காக ரூ.242.77 கோடி செலவிடப்படும் என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் வெறும் நிதி உதவி மட்டுமல்ல; பண்டிகை காலங்களில் குடும்பங்களுக்கு மரியாதையும் நிவாரணமும் வழங்கும் ஒரு முயற்சியாகும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசு தெளிவான பட்ஜெட் ஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார்.
தற்போது டெல்லியில் ஒரு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.853 ஆக உள்ளது. பிரதான் மந்திரி உஜ்ஜ்வலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் வரும் பயனாளர்களுக்கு, மத்திய அரசு வழங்கும் ரூ.300 மானியத்தை கழித்த பின், ஒரு சிலிண்டருக்கு ரூ.553 நிதி உதவி வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஜ்ஜ்வலா திட்டத்தின் கீழ் வராத, ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ஒரு எல்பிஜி சிலிண்டருக்கு முழுத் தொகையான ரூ.853 உதவியாக வழங்கப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
