சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக இன்னும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக் குழு கூட அமைக்கவில்லை. இதனால் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பணிகள் தாமதமாகி இருக்கிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்திருக்கும் சூழலில், திமுக தலைமை அதனை ஏற்கவில்லை என்றும் அதேபோல் அதிக தொகுதிகள் கோரி காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் உள்ளது. திமுகவுடன் எந்த கருத்து வேறுபாடோ, முரணோ இல்லை. கூட்டணி கட்சிகள் நினைப்பதை முதலமைச்சர் செய்வார், யாரையும் அவர் விட்டுக்கொடுக்கமாட்டார்.
கூட்டணி குறித்து மாநிலத் தலைவரான நானே பேசவில்லை என்ற அவர், காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என்று எச்சரித்துள்ளார். மேலும் கூட்டணிக்கு எதிராக பேசுபவர்களை காங்கிரஸ் தலைமை பார்த்துக்கொள்ளும் என்றும் தமிழ்நாட்டில் இந்திய கூட்டணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் தலைவர் என்றும் தொகுதி பங்கீடு குறித்து பேச திமுக ஓரிரு நாட்களில் குழு அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
