2025ல் அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்திய விமான விபத்தை அதன் விமானி செய்திருக்கலாம் என்று தகவல் கசிந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏா் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் ஒரு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து, வெடித்துச் சிதறியது. நாட்டை உலுக்கிய விமான விபத்தில், விமானப் பயணிகள் 241 போ் உள்பட 260 போ் பலியாகினர்.
முதற்கட்ட அறிக்கையில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், ரன் என்பதில் இல்லாமல் கட்-ஆப் என்ற நிலையில் இருந்ததாகவும், இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நிறுத்தப்பட்டு, இரு என்ஜின்களும் செயலற்றுப் போயிருப்பதாகக் கூறப்பட்டது.
மேலும், விபத்து மதியம் 1.40 மணியளவில் நிகழ்ந்திருக்கும் நிலையில், 11.17 மணியிலிருந்து என்ன நடந்தது என்பது குறித்த தகவலும் வெளியானது, மேலும், விமானிகளின் அறையில் இருக்கும் குரல் பதிவில், ஒரு விமானி, ஏன் எரிபொருளை சுவிட்சை அணைத்தீர்கள் என்று கேட்கிறார், அதற்கு மற்றொரு விமானி நான் எதையும் செய்யவில்லை என்கிறார். அதற்குள், விமானம் நிலைப்பாட்டை இழந்து கீழே இறங்குகிறது. மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழுந்து விபத்து நேரிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதாவது, விமானி எரிபொருள் ஸ்விட்சை அணைத்ததே விபத்துக்கு காரணம் என அமெரிக்க ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறப்பட்டு வந்தது. ஆனால் அதை மத்திய அரசு மறுத்தது. மேலும் தனது மகனின் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக விமானி சபர்வாலின் 91 வயது தந்தை, இது குறித்து ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
இந்நிலையில் அகமதாபாத் விமான விபத்து ஒரு தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக விமானியின் திட்டமிட்டச் செயல் என்று இத்தாலிய நாளிதழான ‘கொரியர் டெல்லா செரா’ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விமானம் புறப்பட்ட 32 வினாடிகளிலேயே அதன் எரிபொருள் சுவிட்சுகள் கையால் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் என்ஜின்கள் இயங்காமல் போயுள்ளன. இது ஒரு தற்செயலான தவறு அல்ல, திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டனில் ஆய்வு செய்யப்பட்ட விமானத்தின் காக்பிட் குரல் பதிவு தரவுகள் மூலம், விமானத்தின் தலைமை விமானி கேப்டன் சுமித் சபர்வாலே என்ஜின்களை அணைத்ததாக தெரியவறுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர் மன அழுத்தத்தில் இருந்தது விபத்து நடந்து ஒரு மாதத்தின் பின் தெரிய வந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போயிங் 787 ட்ரீம்லைனர் ரக விமானத்தின் இரண்டு என்ஜின்களும் ஒரே நேரத்தில் இயந்திரக் கோளாறு காரணமாகச் செயலிழக்க வாய்ப்பில்லை என்று அமெரிக்க நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறும் அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கிடையே இந்தக் குற்றச்சாட்டை கேப்டன் சபர்வாலின் குடும்பத்தினரும் விமானிகள் சங்கங்களும் வன்மையாக மறுத்துள்ளனர். விமானத் தயாரிப்பு நிறுவனத்தையும் விமான நிறுவனத்தையும் காப்பாற்றவே இறந்த விமானிகள் மீது பழி சுமத்தப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
