தமிழ்நாட்டில் உரிமைத்தொகை பெறும் மகளிருக்கு அடுத்த 3 மாதங்களுக்கான தொகை முன்கூட்டியே இன்று வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதோடு, அடுத்த ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முழு விவரம் மற்றும் பின்னணியில் உள்ள அரசியல் கணக்குகளை பார்க்கலாம்.
1.31 கோடி மகளிருக்கு ரூ.5000 கிரெடிட்:- தமிழ்நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டம் திமுக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் அவர்களுடைய வங்கிக்கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் முதலில் 1.14 கோடி பெண்கள் பயனடைந்து வந்த நிலையில், ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் மூலமாக மேலும் தகுதி வாய்ந்த பயனாளர்கள் மேலும் இணைக்கப்பட்டு, தற்போது மகளிர் உரிமைத்தொகை பெறுவோரின் எண்ணிக்கை 1.31 கோடியாக உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில், இன்னும் ஓரிரு மாதங்களில் திராவிட மாடலின் தற்போதைய ஆட்சிக்காலம் முடிவுக்கு வரும் நிலையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத்தொகையை முன்கூட்டியே கணக்கில் வரவு வைத்திருப்பதாக முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். மேலும், கோடைகால சிறப்பு பணமாக ரூ. 2 ஆயிரமும் சேர்த்து மொத்தம் ரூ. 5 ஆயிரமாக வரவு வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, காலையிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதுபோக, திராவிட மாடல் 2.0-இல் மகளிர் உரிமைத்தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு மகளிருக்கு நற்செய்தியாக போய் சேர்ந்துள்ளது.
மகளிரை மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு! பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, “பெண்களின் உழைப்புக்கும் மரியாதைக்கும் கிடைத்த வெற்றி” எனவும் “இந்த அறிவிப்பை வரவேற்பதாகவும்” அறிவித்துள்ளார். அதேபோல, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது ‘X’ பக்கத்தில், “இது மகளிரை மனம் குளிரச் செய்யும் மகத்தான அறிவிப்பாகும். இதைச் செயல்படுத்திய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். ‘அடுத்து அமையப் போகிற திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் 2000 ரூபாய் என உயர்த்தி வழங்கப்படும்’ என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார். இது யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பாகும்.
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெற்று வரும் பெண்கள் ‘மீண்டும் திமுகவைத்தான் ஆட்சியில் அமத்துவோம்!’ என்று உறுதி எடுத்து இருக்கிறார்கள். இந்த அறிவிப்பு அவர்களுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார். சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், “முதல்வரின் சமூக நீதி பார்வையும் சமத்துவம் நோக்கிய நடவடிக்கையையும் வரவேற்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “பெண்களுக்கு காலையிலேயே ஒரு இன்ப அதிர்ச்சியை முதல்வர் கொடுத்துவிட்டார். இதை நாங்கள் வரவேற்கிறோம்” என கூறியுள்ளார். இவ்வாறு பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று பாராட்டி பேசி வருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் இதனை பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

தோல்வி பயத்தால் திடீர் அறிவிப்பு! அதுவே மறுபுறம் எதிர்க்கட்சிகள் தரப்பை பொறுத்தவரை, இது குறித்து விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “28 மாதங்களாக “1000 ரூபாய்” கொடுக்காமல் இழுத்து அடித்த ஸ்டாலின் அரசு, தற்போது மூன்று மாதத் தொகையோடு சேர்த்து “கோடைக்கால சிறப்புத் தொகை” கொடுக்கிறாராம். 2024, 2025 ஆண்டுகளில் நமக்கு கோடைக்காலமே வரவில்லையா திரு.ஸ்டாலின் அவர்களே? தேர்தல் தோல்வி பயம், பொம்மை முதல்வரை என்னவெல்லாம் செய்ய வைக்கிறது என்று பார்த்தீர்களா? “தேர்தல் நேரத்து பணம்” வரவு வைக்கும் இந்த “Patchwork” வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?” என சாடியுள்ளார்.
பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “டாஸ்மாக் மூடுவதை பற்றி எந்த றிவிப்பும் இல்லாமல் உரிமைத்தொகையை உயர்த்தி கொடுப்பதில் என்ன பலன்?” என கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ‘X’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய் அவர்கள், “புதிதாகக் கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 எனத் திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான் கோடைக் காலம் வருகிறதா என்ன? இத்தனைக்கும் காரணம் வீதிக்கு வீதி மட்டுமில்லாமல், வீட்டுக்கு வீடு ஒலிக்கும் விசில் சத்தம்தான். குறிப்பாக, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்திற்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே இதற்குக் காரணம்” என தெரிவித்துள்ளார். இதுபோக இன்னபிற எதிர் தலைவர்களும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இப்போது அறிவித்தது ஏன்? சரி தற்போது ஏன் இந்த திடீர் அறிவிப்பு என பார்த்தால், அதற்கான பதிலாக முதல்வர் மற்றும் துணை முதல்வரின் கருத்துக்கள் இருக்கின்றன. அதாவது, “விரைவில் தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது, இந்த தொகையை பொதுமக்களுக்கு கொடுக்க விடாமல் சூழ்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளனர். அதனை முன்கூட்டியே நாங்கள் அறிந்து கொண்டதன் அடிப்படையிலும், பெண்கள் யாரும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் அவதிப்படக்கூடாது என்பதற்காகவும் இப்போதே 5 ஆயிரம் ரூபாய் உங்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கிறோம்” என முதல்வர் கூறியுள்ளார். சூழலும் அதுபோலவே உள்ளது.
முக்கியமாக மூன்று காரணங்களை பொறுத்தவரை, ஒன்று தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பின்பாக மாநில அரசு புதிதாக எந்த அறிவிப்புகளையும் திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. அது மக்களை மத்தியில் ஒருவித அதிருப்தியை ஏற்படுத்திவிடும். இதை தான் மறைமுகமாக சூழ்ச்சி என முதல்வர் குறிப்பிடுகிறார் என்றே பார்க்கலாம். அதன் காரணமாகவே தற்போதே தேர்தல் முடிவு வெளியாகும் மாதம் வரை உரிமைத்தொகை அறிவித்ததோடு, கோடைக்கால சிறப்புத்தொகை என அறிவித்து மகளிர் ஓட்டுக்களை சிதறவிடாமல் பார்த்துக்கொண்டுள்ளார் முதல்வர்.

இரண்டாவது, தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதும் முன்னர் சொன்னது போல திட்டங்கள் அறிவிக்க முடியாது என்பதால், அந்த தேர்தலுக்கு நெருக்கமான காலத்தில் திமுக அரசு மீது பெண்களுக்கு எந்த அவப்பெயரும் ஏற்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளவே இப்போது இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது, அவ்வப்போது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மகளிர் உரிமைத்தொகை’ எனும் பெயருக்கு பதிலாக ‘குல விளக்கு திட்டம்’ என்ற பெயரில் பெண்களுக்கு மாதம் ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதனையும் முறிடிக்கும் விதமாகவே, “அடுத்த ஆட்சியில் ரூ.2000 வழங்கப்படும்” என கூடுதலாக முதல்வர் அறிவித்திருப்பது. ஆக மொத்தத்தில் திமுக மகளிர் வாக்குகளை நோக்கி ஒரு முக்கிய காயை நகர்த்தியுள்ளது என்றே இன்றைய அறிவிப்பை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இங்கு மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது, அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும் முன்பே அதிகாரிகள் வாயிலாக மேல்மட்டத்தில் தகவல்கள் கசிவது வழக்கம். ஆனால், தற்போதைய இந்த அறிவிப்பை பொறுத்தவரை மிகவும் ரகசியமாக பாதுகாத்துள்ளார் முதல்வர். இதைவிட முக்கியமாக, ஒருவேளை முதலில் நேற்றே அறிவிப்பை மட்டும் வெளியிட்டிருந்தால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து திட்டத்தை முடக்கியிருக்க கூடும். ஆனால், அதற்கும் இடம் கொடுக்காத வகையில் முதலில் அனைத்து வங்கிக்கணக்கிலும் ரூ.5000 தொகையை வரவு வைத்துவிட்டு பின்னர் அறிவித்திருப்பது என்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்ல வேண்டும்.\

முதல்வர் நிதிஷ் வழியில் முதல்வர் ஸ்டாலின்? ஒருபுறம், “”அங்கு கடன்தொகை 10,000; இங்கு உரிமைத்தொகை 5000″ எனும் மாற்றத்தை தவிர பீகார் தேர்தலில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கும் தற்போதைய முதல்வரின் அறிவிப்புக்கும் பெரிய வித்தியாசம் இல்லை”. பீகாரில் அந்த அறிவிப்பு வெற்றிக்கு கைகொடுத்தது. அதேபோல் இங்கும் திமுகவின் வெற்றிக்கு முதல்வரின் அறிவிப்பு கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த இரு திட்டங்களின் தொடர்பை உற்றுப்பார்க்கும் சிலரோ, “கடைசியில் பீகாரில் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டது போல் இங்கு நடக்காமல் இருந்தால் சரி” என நகைப்போடு கம்மெண்ட் அடிப்பதையும் பார்க்க நேரிடுகிறது.
