தேர்தல் பயம் எங்களுக்கு கிடையாது, அது எதிரணியினருக்குதான் இருக்கிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூரில் நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மத்திய அரசின் சூழ்ச்சியால் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை நிறுத்தலாம் என்றும், இதனால் NDA கூட்டணி வெற்றி பெறலாம் என்றும் அவர்கள் நினைப்பதாக அமைச்சர் குற்றம் சாட்டினார்.
“சர்ஜிகல் ஸ்டிரைக்” என்ற சொல்லக்கூடிய அளவில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு வரவேண்டிய மகளிர் உரிமைத் தொகை 2000 ரூபாயை அவர்கள் நிறுத்த முடிவு செய்தால், அதையும் சேர்த்து யாரிடமும் சொல்லாமல் உடனடியாக 5000 ரூபாயை அறிவித்தார்” என்று முதல்வர் ஸ்டாலினின் நடவடிக்கையை அமைச்சர் விளக்கினார்.
“எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யார் தடுக்க நினைத்தாலும் அதனை முறியடித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நல மக்களுக்கான பணிகளை செய்வார்” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வர வேண்டும் என முதலமைச்சரும் துணை முதல்வரும் சொல்லியுள்ளார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். “ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் வந்து சென்றதால் தான் நாங்கள் 40 இடங்களை தக்க வைத்தோம். அதேபோல் அவர்கள் அடிக்கடி வந்தால் கடந்த தேர்தலை விட சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் 200 இடங்களை கடந்து வெற்றி பெறுவோம்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
