சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன் பட்டியில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், அதிமுக-திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது அண்ணா தொடங்கிய கட்சியை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார். அதிமுக தொடங்கிய கட்சியை எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் . என்னைப் போல் தனியாக நின்று தேர்தலில் 1% வாக்கு வாங்க முடியுமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,”பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். திரிஷாவிடம் இருந்து வெளியே வரணும். வெளியில் வந்தால்தான் எல்லாமே நடத்த முடியும்” என்றார்.
பொதுவெளியில் ஒரு பெண்ணை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசிய இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றனர். அந்தவகையில், தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டன பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?
முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல், பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் என்றூ தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி.யும் நாயினாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளை முன்வைக்கும் போது பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல” என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களை கண்ணியத்துடன் பேசுவது மற்றும் நடத்துவது தான் நாகரீக அரசியல் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழச்சி தங்கபாண்டியனின் இந்தக் கண்டனம் சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
