அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காணாமல் போன இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 9 முதல் அமெரிக்காவில் காணாமல் போன 22 வயது இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையாவின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் வசிக்கும் சாகேத் ஸ்ரீனிவாசய்யா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து வந்தார். கலிபோர்னியாவில் உள்ள டில்டன் பிராந்திய பூங்காவிற்கு அருகிலுள்ள ஒரு ஏரிக்கு அருகில் அவர் கடைசியாகக் காணப்பட்டார்.
https://x.com/CGISFO/status/2022473936676753764?
சாகேத்தின் உடல் மீட்கப்பட்டதை உள்ளூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய தூதரகம் சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளது. தூதரகம் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்த கடினமான நேரத்தில் அவர்களுடன் துணை நிற்பதாகவும் தெரிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருவதாகவும், உடலை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சாகேத்தின் தந்தை கடைசியாக பிப்ரவரி 9 ஆம் தேதி தனது மகனுடன் பேசியதாகக் கூறினார். அவர் காணாமல் போனதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் அவரது நண்பர்கள் மற்றும் அறை தோழர்களைத் தொடர்பு கொண்டனர். எந்த தகவலும் கிடைக்காததால், பெர்க்லி காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. பிப்ரவரி 13 ஆம் தேதி, சாகேத்தின் பெற்றோரும் கர்நாடக அரசிடம் உதவி கோரினர். கர்நாடக அரசு வெளியுறவு அமைச்சகத்திடம் தலையிட்டு உதவிகளையும் வழங்குமாறு கோரியது.
சாகேத் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் Product Development program திட்டத்தில் முதுகலைப் பட்டம் படித்து வந்தார். அவர் முன்பு ஐஐடி மெட்ராஸில் வேதியியல் பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
