திமுக – தேமுதிக கூட்டணி குறித்து தமிழக வெற்றிக்கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் வாய்க்கால் ரோடு பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வரும் காலத்தில் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதுதான் இன்று மக்களின் கனவாக உள்ளது என்றார்.
திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது தொடர்பாக பேசுகையில் அது அவர்களுடைய விருப்பம். நீங்க எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் செல்லலாம். எங்கிருந்தாலும் வாழ்க என பதிலளித்தார். மேலும் தவெகவின் கூட்டணி குறித்து பேசிய அவர், ஒவ்வொருவரும் ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார்கள். கூட்டணியை பொறுத்த அளவில் எந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதை தலைவர் முடிவு செய்வார்.
மேலும், பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை அறிவித்து விட்டது. தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லையே என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள். ஒவ்வொரு கட்சியில் இருந்தும் நான்கு, ஐந்து பேர் சீட்டுக்கள் கேட்கிறார்கள். ஒருவருக்கு மட்டும் தான் கொடுக்க போகிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்குமிக்க இரண்டு, மூன்று பேர் உள்ளார்கள். அப்போது தான் யார் யாரோடு சேர போகிறார்கள் என்பது தெரிய வரும்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் வருவார்களா என்ற கேள்விக்கு பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார். எதையும் வெளிப்படையாக பெயரை குறிப்பிட்டு சொல்ல முடியாது. அவ்வாறு பெயர்களை குறிப்பிட்டு சொல்லும் போது தடைகள் ஏற்படும் என்றார்.
