மத்திய கிழக்கில் போர் பதற்றம் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது ஒரு வரையறுக்கப்பட்ட ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன; இதற்குப் பதிலடியாகத் தெஹ்ரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், அடுத்த 10 நாட்கள் மிகவும் முக்கியமானவை என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார், ஆனால் அதே சமயம் ஈரான் மீதான தாக்குதல்களுக்குத் தனது வான்படைத் தளங்களைப் பயன்படுத்த அமெரிக்காவிற்கு பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது இந்த விவகாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் மீது ஏதேனும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்குப் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம் எனத் தெஹ்ரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது; இது தொடர்பாக ஐநா சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில், போர் மூழும் பட்சத்தில் பிராந்தியத்தில் உள்ள எதிரிப் படைகளின் தளங்கள், ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் ஈரானின் “சட்டபூர்வமான இலக்குகளாக” (Legitimate targets) கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஈரானால் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் நட்பு நாடுகளின் முக்கிய உள்கட்டமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் இருப்பதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
டிரம்பின் 10 நாள் இறுதி எச்சரிக்கை: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கையில், ஈரான் புதிய உடன்படிக்கைக்குச் சம்மதிக்கிறதா அல்லது அமெரிக்கா அதன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது இன்னும் 10 நாட்களில் உலகிற்குத் தெரியவரும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானை ஒரு புதிய அணுசக்தி அல்லது பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு இணங்க வைக்க முயற்சிப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஒரு வரையறுக்கப்பட்ட ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கருதப்படுகிறது. ஈரானை அடிபணிய வைப்பதற்கான ஒரு தந்திரோபாயமாக ட்ரம்ப்பின் இந்த 10 நாள் காலக்கெடு பார்க்கப்பட்டாலும், “ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருக்க முடியாது, இல்லையெனில் மோசமான விளைவுகள் ஏற்படும்” என அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மறுப்பு: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீதான தாக்குதலுக்குத் தனது வான்படைத் தளங்களைப் பயன்படுத்த பிரிட்டன் அனுமதி மறுத்துள்ளது; பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான இந்த முடிவு, அமெரிக்காவின் நீண்டகால நெருங்கிய கூட்டாளிகளே ராணுவ நடவடிக்கையினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மிகுந்த அச்சத்தில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, சர்வதேச சட்ட விதிகளின்படி இத்தகைய தாக்குதல்களுக்குத் துணை நிற்பது சட்டமீறலாகக் கருதப்படும் என்பதால் பிரிட்டன் இந்தத் தடையை விதித்துள்ளதாகத் தெரிகிறது.
மேற்குலக நாடுகளிடையே நிலவும் இத்தகைய முரண்பட்ட நிலைப்பாடுகளுக்கு மத்தியில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ராணுவ நடவடிக்கையைக் காட்டிலும் ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்னுரிமை அளித்து வருகின்றன.
அமெரிக்காவின் ஒரு சிறிய அளவிலான ராணுவத் தாக்குதலும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்; குறிப்பாக, ஈரானின் பதிலடி நடவடிக்கைகளால் வளைகுடா பிராந்தியம், உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஆகியவற்றில் கடும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) பதற்றம் அதிகரிப்பது உலகளாவிய கச்சா எண்ணெய் விலை விண்ணைத் தொடக் காரணமாகலாம் மேலும், ஒரு பிராந்திய மோதல் முழு அளவிலான போராக அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
