எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒருபுறம் மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என பலர் கூறி வருகின்றனர். மறுபுறம் திமுக மீதான அதிருப்தியால், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. ஆனால் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், மாநிலத்தை பாஜகவிடம் அடகு வைத்தாற்போல் ஆகிவிடும் என்பதால், அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என திமுகவினர் கூறி வருகின்றனர்.
இன்னொரு புறம் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் வழக்கம் போல கூட்டணி ஏதும் அமைக்காமல் தனித்து 234 தொகுதிகளிலும் களம் காணவுள்ளனர். இவர்களை கடந்து இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நபர் என்றால் அது தவெக தலைவர் விஜய் தான். தவெக என்ற கட்சியை தொடங்கி 3 வருடங்கள் ஆன நிலையில், முதல் முறையாக தேர்தலை சந்திக்க இருப்பதாலும், ஜென் சி வாக்காளர்கள் அவருக்கு ஆதரவு தருவதால் கணிசமான வாக்குகளை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் பெருவாரியான கருத்துக்கணிப்பில் மீண்டும் திமுக தான் ஆட்சியமைக்கும் என கூறப்படுகிறது. அப்படியிருக்க, திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணையும் என பல வதந்திகள் இணையத்தில் பதிவிடப்பட்டது.
ஆனால் அவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ளாது திமுக தங்களது தேர்தல் வேலையை மும்முரமாக செய்து வருகிறது. சமீபத்தில் தேமுதிகவும் திமுகவில் இணைந்த நிலையில், இனி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை மட்டுமே மிஞ்சியுள்ளது. அதற்கான வேலைகளும் நடைபெற்று வரும் நிலையில் வரும் 22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில், திமுக மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளை சேர்த்து மொத்தம் 176 இடங்களில் திமுக போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து காங்கிரஸ்க்கு 28 தொகுதிகளும், விசிகவுக்கு 8 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 6 சட்டமன்றம் மற்றும் 1 ராஜ்யசபா தொகுதியும் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிட்க்கு 6, இந்திய கம்யூனிட்க்கு 6, மக்கள் நீதி மய்யத்திற்கு 2 மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள் வழங்கப்பட இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் திமுக குறைந்தது 160 தொகுதிகளுக்கு கீழ் இல்லாமல் தனித்து களம் கான இருப்பதாக கூறப்படுகிறது.
