டிஜிட்டல் யுகத்தில் மோசடி செய்வது என்பது முன்பை விட இப்போது மிகவும் கடினமாகிவிட்டது; ஒரு நபர் எவ்வளவுதான் தந்திரமாகச் செயல்பட்டாலும், கணினியில் விடப்படும் டிஜிட்டல் தடயங்கள் இறுதியில் உண்மையை வெளிக்கொண்டு வந்துவிடுகின்றன. அப்படித் தற்செயலாகக் கண்டறியப்பட்ட ஒரு சில “காணாமல் போன” பிரியாணி பில்கள் தான், இந்தியாவையே உலுக்கிய சுமார் ரூ.70,000 கோடி வரி ஏய்ப்பு மோசடியை அம்பலப்படுத்தின.
2019-ம் ஆண்டு முதல் சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பில்லிங் தரவுகளை ஆய்வு செய்ததில், சராசரியாக 27% விற்பனை விவரங்கள் மறைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது; இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ.70,000 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதால், அரசுக்கு பில்லியன் கணக்கிலான டாலர்கள் வரி இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சுமார் ரூ.2,000 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளும், தெலங்கானாவில் ரூ.1,500 கோடி மதிப்பிலான விற்பனை விவரங்களும் நீக்கப்பட்டுள்ளன; இதேபோல தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களிலும் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் 3,734 PAN கார்டு கணக்கை ஆய்வு செய்ததில், ரூ.5,000 கோடிக்கும் அதிகமான விற்பனை மறைக்கப்பட்டிருப்பது அம்பலமானது. வெறும் 40 உணவகங்களை மட்டும் மாதிரியாக எடுத்து ஆய்வு செய்தபோது, அங்கு கணக்கில் காட்டப்படாத வருவாய் சுமார் ரூ.400 கோடியாக இருந்தது; சில இடங்களில் மொத்த விற்பனையில் 25 சதவீதம் வரை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது வருமான வரித்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வரி ஏய்ப்பு மோசடியைத் தொடர்ந்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தனது விசாரணை வளையத்தை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளது; தற்போது கண்டறியப்பட்டுள்ள போலி மற்றும் திருத்தப்பட்ட பில்களை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வருமான வரித் தாக்கல் மற்றும் வங்கிப் பரிவர்த்தனை ஆவணங்களுடன் வருமான வரித்துறை ஒப்பிட்டு ஆய்வு செய்து வருகிறது. இந்த ஆய்வின் முடிவில், கணக்கில் காட்டப்படாத வருமானம் உறுதியானால், சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அபராதம் மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடந்தது? இந்த மெகா மோசடி அம்பலமான எப்படி அம்பலமானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான ஆய்விற்காகச் சென்றபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது; இது திட்டமிடப்பட்ட சோதனையோ அல்லது அதிரடி நடவடிக்கையோ அல்ல. கவுண்டரில் பில்லிங் நடந்து கொண்டிருந்த வேளையில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு அமர்ந்து சாப்பிடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கும், பில்லிங் சாப்ட்வேரில் பதிவாகும் பில்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு இருப்பதை அதிகாரிகள் கவனித்தனர். இந்தச் சிறிய சந்தேகமே, பின்னர் நாடு தழுவிய அளவில் சுமார் ரூ.70,000 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பைக் கண்டறியும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
பில்லிங் சாப்ட்வேரில் நடந்த திட்டமிட்ட சதி: இந்த மோசடியில் சில ரொக்க பில்கள் கணினியில் ஒரு சில நொடிகள் தோன்றிவிட்டு, பின்னர் தானாகவே மறைந்து விடுவதை அதிகாரிகள் கவனித்தனர்; வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அச்சிடப்பட்ட ரசீதுகள் சரியாக இருந்தாலும், மென்பொருளின் பின்புலத் தரவுகள் (Software logs) முற்றிலும் மாறுபட்ட கதையைச் சொல்லின. இது ஒரு சாதாரண தொழில்நுட்பக் கோளாறு அல்ல, மாறாக மிகவும் நுட்பமாகத் திட்டமிடப்பட்ட ஒரு மோசடி என்பது இதன் மூலம் உறுதியானது. இந்த பில்லிங் சாப்ட்வேர் மூலமாகவே ஒரு பெரிய நிழல் உலக விளையாட்டே அரங்கேறியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது; தொடக்கத்தில் இது ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் மட்டும் நடந்த சிறிய குளறுபடியாகக் கருதப்பட்டாலும், தொடர் விசாரணையில் பல உணவகங்கள் இதே மென்பொருளைப் பயன்படுத்தி வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது.
இந்த வழக்கின் விசாரணை அகமதாபாத்தைச் சேர்ந்த அந்த சாப்ட்வேர் நிறுவனத்தின் தரவுத்தளத்தை (Backend) அடைந்தபோது, நாடு முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்களின் 60 டெராபைட் (Terabytes) அளவிலான பிரம்மாண்டமான தரவுகள் சிக்கின; இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள ஒரு டிஜிட்டல் ஆய்வகத்தில் நீக்கப்பட்ட அந்தப் பில்களை மீண்டும் மீட்டெடுக்கும் பணிகளில் வல்லுநர்கள் ஈடுபட்டனர். மென்பொருளில் இருந்து தரவுகளை நீக்கினாலும், ஒவ்வொரு பணப் பரிவர்த்தனையும் கணினியின் ஆழமான பகுதிகளில் ஒரு டிஜிட்டல் தடயத்தை விட்டுச் சென்றிருந்தது; அந்தத் தடயங்களை யாராலும் முழுமையாக அழிக்க முடியாது என்பதால், அதன் மூலம் நடந்த அனைத்து மோசடிகளும் தற்போது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளன.
AI எவ்வாறு உதவியது? செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்தி நீக்கப்பட்ட பில்கள் அனைத்தும் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டன; கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த உணவகங்கள் சுமார் ரூ.2.43 லட்சம் கோடி மதிப்பிலான பில்களை உருவாக்கியுள்ளதும், அதில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பில்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு திட்டமிட்டு நீக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் அம்பலமானது. சில உணவகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரொக்க பில்களை மட்டும் நீக்கிய வேளையில், மற்ற சில உணவகங்கள் ஒரு மாத கால விற்பனை விவரங்களை மொத்தமாக நீக்கி மோசடி செய்துள்ளன; விற்பனை வருவாயைக் குறைத்துக் காட்டி வரி ஏய்ப்பு செய்வதே இவர்களின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்பதுடன், பல மாநிலங்களில் இத்தகைய முறைகேடுகள் பரவலாக நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
