2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அந்த வகையில், ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் முக்கியக் கட்டமாக, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு சிறப்புக் குழுவை திமுக தலைமைக்கழகம் அமைத்துள்ளது.
இது குறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடுகளை இறுதி செய்வதற்காக இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவின் தலைவராகக் கழகப் பொருளாளர் டி.ஆர். பாலு நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து பணியாற்றும் குழு உறுப்பினர்களாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா மற்றும் ஆ. இராசா, கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
