தமிழக அரசியல் களத்தில் தனித்துப்போட்டியிட்டு வாக்கு சதவீதத்தை உயர்த்தி வரும் நாம் தமிழர் கட்சி, சமீபத்திய தேர்தல்களில் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு புதிய அதிரடி வியூகத்தை வகுத்து வருகிறது. 2021 தேர்தலில் காரைக்குடியை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நாதக 14.80% வாக்குகளை பெற்றது. அதேபோல், கடந்த 2024 தேர்தலில் ஒரேயொரு தொகுதியில் மட்டும் டெபாசிட் பெற்றுத் தனது செல்வாக்கை நிரூபித்திருந்தது. இதனை ஒரு பின்னடைவாகப் பார்க்காமல், அங்கிருந்து ஒரு மாபெரும் வெற்றியை நோக்கி நகர சீமான் திட்டமிட்டுள்ளார்.
அந்தவகையில் தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு திருச்சியில் இன்று பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் சீமான் ஒரே மேடையில் அறிவிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்ற கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பிஸியாக இருக்கும் வேளையில், தனித்து நின்றே தீருவோம் என்ற உறுதியோடு முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளைத் துரிதப்படுத்த சீமான் திட்டமிட்டுள்ளார்.
இருப்பினும், காரைக்குடியில் சீமான் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிடுவது கட்சித் தொண்டர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தும் என சீமான் கருதுகிறார். அந்தவகையில் தனது சொந்த தொகுதியான இங்கு களமிறங்கினால், குடும்பத்தாரை வைத்து உள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு, தமிழகம் முழுவதும் தான் சுற்றுப்பயணம் செல்லலாம் என சீமான் திட்டமிட்டுள்ளாராம்.
