கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தவர் ஜெயலலிதா, அவரது மறைவுக்கு பின் என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள் என்று கூறி ஓ.பன்னீர் செல்வம் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையும், வீரவணக்கமும் என்று கூறினார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தன்னலம் பாரத உன்னத தலைவர் ஜெயலலிதா. மேலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைத்து ஆட்சி அமைத்தவர் ஜெயலலிதா. ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று சொன்னது தவறா? என்று ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சிக்கு சோதனை வந்தபோது முதல்வர் பதவியை என்னிடம் கொடுத்தவர் ஜெயலலிதா, ஆனால், அவரது மறைவுக்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தி முதல்வர் ஆக்கினார்கள். நான் எந்த துரோகமும் செய்யவில்லை. தமிழ்நாட்டின் முதல்வராக 3வது முறையாக கட்டாயத்தின்பேரில் பொறுப்பேற்றேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி அழைத்தால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மதியாதார் வாசலை மிதியாதே என ஔவையார் கூறியுள்ளார் என்று சொன்னார்.
