தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்தித்த சீமான், 3 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேடிய மற்றும் மாநில தேர்தல் ஆணையங்கள் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தமிழ் நாடு வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு ஒன்றை அளித்துள்ளார். அம்மனுவில் கூறியிருப்பதாவது, வரவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களை நடத்துவதில் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதே வேளையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் தேர்தல் செயல்முறைகள் குறித்து எங்கள் கட்சியின் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறோம்.
தேர்தல் கட்டங்கள் குறித்த கோரிக்கை: ஒரே மாதிரியான புவியியல் நில அமைப்பை கொண்டுள்ள மேற்கு வங்காளம், பீகார் போன்ற வட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. குறிப்பாக கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் ஒரே கட்டமாக அதுவும் பெரும்பாலும் தேசிய கால அட்டவணையின் முதல் கட்டத்திலேயே நடத்தப்படுகின்றன. இதன் விளைவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நாள் வரை மிக நீண்ட காலத்திற்கு கடந்த முறை சுமார் 42 நாட்கள் பாதுகாப்புக் அறைகளிலேயே வைக்கப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நீண்டகாலப் பாதுகாப்பில் எங்களுக்குப் போதிய நம்பிக்கை இல்லை. பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்பட்ட போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் தலையீடு இருக்கலாம் என்ற கவலை நீடிக்கிறது. எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல்களை பல கட்டங்களாக நடத்த ஆணையத்தை வேண்டுகிறோம். இந்தியாவிலேயே மிகக் குறைந்த பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. ஒருவேளை ஒரே கட்டமாக நடத்துவதாக இருந்தால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் காலத்தைக் குறைக்க தேசிய தேர்தல் அட்டவணையின் இறுதிக் கட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
பிரச்சார காலத்தை நீட்டித்தல்: தேர்தல் அறிவிப்பு (வேட்புமனுத் தாக்கல்/வைப்புத் தொகை உட்பட) மற்றும் வாக்குப்பதிவு தேதிக்கு இடைப்பட்ட தற்போதைய கால அவகாசம் போதுமானதாக இல்லை. முன்னதாக, இந்த இடைவெளி சுமார் 20 நாட்கள் மட்டுமே இருந்தது. எங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிக்கு, தமிழ்நாட்டின் 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் தொகுதிகளில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, எங்கள் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டு செல்வது 20 நாட்களுக்குள் என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகும். ஒரு முழுமையான பிரச்சாரத்திற்கு 60 நாட்கள் தேவை என்றாலும், குறைந்தபட்சம் 40 நாட்களைக் கட்டாயப் பிரச்சாரக் காலமாக வழங்க வேண்டும் என்று ஆணையத்தை வலியுறுத்துகிறோம்.
சமமான வாய்ப்பை உறுதி செய்தல்: நியாயமான ஜனநாயகச் செயல்முறையை உறுதி செய்ய, வளர்ந்து வரும் கட்சிகள், நிறுவப்பட்ட தேசிய மற்றும் ஆளும் மாநிலக் கட்சிகளுக்கு இணையாக மக்களைச் சென்றடைய வேண்டும். சாமானிய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை வாக்காளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்க கால அவகாசத்தை நீட்டிப்பது அவசியமாகும்.
வரவிருக்கும் தேர்தலில் இந்தப் புகார்களை இந்தியத் தேர்தல் ஆணையம் கனிவுடன் பரிசீலித்து, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு சமமான வாய்ப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
