காசி மற்றும் கயாவுக்குப் புனித யாத்திரை சென்ற தமிழர்கள் 22 பேர் பயணித்த பேருந்து, பீகாரின் ரோத்தாஸ் மாவட்டம், ஜமுஹார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்துப் பேருந்து ஓட்டுநர் சோனு குமார் அளித்துள்ள வாக்குமூலம் அதிர வைக்கிறது. “நாங்கள் வாரணாசியிலிருந்து கயா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். அப்போது பின்னால் வந்த ஒரு லாரி, வேண்டுமென்றே எங்களது பேருந்தின் பக்கவாட்டில் பலமாக மோதியது. மோதியதுடன் நிற்காமல், பேருந்தை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை அந்த லாரி இழுத்துச் சென்றது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராமு (72) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பேருந்தில் இருந்த பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் ஜமுஹாரில் உள்ள நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் செய்தி கேட்டுத் தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவரின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வரவும், மற்றவர்களைப் பாதுகாப்பாகத் தமிழகம் அழைத்து வரவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
