ஐக்கிய அரபு அமீரகத்தின் பங்குச் சந்தைகள் மூடல்..! விருந்தாளிகளே முக்கியம் என நெகிழ வைத்த அரசு..!
ஈரான் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்தின் இரு பங்குச்சந்தைகள் இரு தினங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா, ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் எதிரொலியாக ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. துபாயில் உள்ள உலகளாவிய பன்முக கலாசார பொழுதுபோக்கு மையத்தை தற்காலிகமாக மூடுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதேப் போல, அனைத்து சுற்றுலாத் தலங்கள், உணவகங்கள், ரிசார்ட்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு துபாய் மற்றும் அபுதாபியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் தங்குமிடம் மற்றும் உணவுச் செலவுகளை அரசே ஏற்கும் எனவும், விமான ரத்து காரணமாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் பயணிகள் ஏற்கனவே தங்கியுள்ள ஹோட்டல்களில் தங்குமிட காலத்தை இலவசமாக நீட்டிக்கொள்ளலாம் எனவும், விருந்தினர்களின் பாதுகாப்பே முக்கியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டு முக்கிய பங்குச் சந்தைகளான அபுதாபி செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் மற்றும் துபாய் நிதிச்சந்தை ஆகியவற்றின் வர்த்தகம் இன்றும், நாளையும் நிறுத்தி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் தாக்குதலில் இதுவரை யுஏஇ-யில் 3 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
