திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. அந்த ரயில் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயில் என்பதை இந்தி வார்த்தையில் “கர்தவ்ய த்வார்” குறிப்பிடுகின்றனர். இதனை, கர்தவ்ய த்வார் என தமிழ் எழுத்துக்களைக் கொண்டும், KARTAVYA DWAR என்ற ஆங்கில எழுத்துக்களைக் கொண்டும் எழுதியுள்ளனர்.
அலுவலக நுழைவாயில் என்பதை தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில், தமிழ் எழுத்துக்களை கொண்டு இந்தி மொழி வார்த்தையில் எழுதியுள்ள ரயில்வே நிர்வாகத்தினரை கண்டித்து தமிழ்நாடு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, தி.மு.க.வினர், காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்டோர் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தடையை மீறி பேரணியாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் திருச்சி ரயில்வே மண்டல அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை கருப்பு மையை பூசி அழித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் பெரும் பூதாகரமான நிலையில், இந்தி பெயரை அகற்ற அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். கல்வெட்டில் உள்ள இந்தி பெயரை உடனடியாக மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
