இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்காசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கமேனிக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர் யாராக இருந்தாலும், எங்கு பதுங்கியிருந்தாலும் அவரை அழிப்பதே எங்களின் நோக்கம்” என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) திட்டத்தின் கீழ் இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரேலிய ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிரட்டல்களுக்கு மத்தியிலும், ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் உயர்மட்டக் குழுவான ‘அசெம்பிளி ஆஃப் எக்ஸ்பர்ட்ஸ்’ தீவிரப்படுத்தியுள்ளது. கமேனியின் மகனான முஜ்தபா கமேனி அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை போரை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் பல்வேறு நகரங்களில் இன்றும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,164 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் 40 பேர், இஸ்ரேலில் 11 பேர், ஈராக்கில் 2 பேர், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் தலா 3 பேர், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
