கரூர் விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, தமிழகத்திலேயே ஆஜராக அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரமே இது குறித்து எழுத்துப்பூர்வமான மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (மார்ச் 15) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேராகவே இந்தக் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி கரூர் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்யை காண கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவிரன்பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. அந்தவகையில், தவெக நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து தவெக தலைவர் விஜயிடம் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 12-ந்தேதி, 2-வது முறையாக ஜனவரி 19-ந்தேதி, 3-வது முறையாக நேற்று விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று விஜய்யிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் கரூர் வழக்கு விசாரணைக்கு தமிழ்நாட்டில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதி வழங்குமாறு விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி (ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். டெல்லிக்கு அடிக்கடி பயணம் செய்வது கட்சிப் பணிகளைப் பாதிப்பதோடு, தேவையற்ற பயண நேரத்தையும் செலவிடுகிறது.
இந்தநிலையில், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் அல்லது தமிழகத்தின் வேறு எந்த மாவட்டத்திலாவது விசாரணை நடத்தினால், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
