2026-ம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா களைகட்டத் தொடங்கியுள்ள நிலையில், பெங்களூருவில் உள்ள புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்துவதற்கு கர்நாடக மாநில அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.
அரசின் அனுமதி மற்றும் நிபந்தனைகள்: கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA) விடுத்த கோரிக்கையை ஏற்று, அம்மாநில அரசு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. ஐபிஎல் போட்டிகளின் போது மைதானத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியின் கோட்டையாகக் கருதப்படும் சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
அந்த வகையில் மார்ச் 28ஆம் தேதி நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றதை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட கூட்ட நேரிசல் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். இதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அச்சம்பவத்திற்கு பிறகு பெங்களூரு சின்னசாமி மைதானம் போட்டிகளை நடத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது.
மேலும், அங்கு நடைபெற இருந்த மகாராஜா பிரீமியர் லீக், ஐசிசி மகளிர் உலகக் கோப்பை போட்டிகள், மகளீர் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்கள் வேறு மைதானங்களுக்கு மாற்றப்பட்டன. இந்தநிலையில், மீண்டும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வரா தலைமையிலான நிபுணர் குழு மற்றும் கே.எஸ்.சி.ஏ, ஆர்.சி.பி மற்றும் டி.என்.ஏ பிரதிநிதிகளுடன் இன்று காலை விதான சவுதாவில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது, எம். சின்னசாமி மைதானத்தில் எடுக்கப்பட்ட ஏற்பாடுகள் மற்றும் இணக்க நடவடிக்கைகள் குறித்து நிபுணர் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது,” என்று மாநில கிரிக்கெட் சங்கம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்றும் ஏற்பாடுகளை முழுமையாக மதிப்பாய்வு செய்த பிறகு, பெங்களூரு எம் சின்னசாமி மைதானத்தில் வரவிருக்கும் ஐபிஎல் போட்டிகளை நடத்த உள்துறை அமைச்சர் முறையாக ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
