சென்னையில் தங்கம் விலை இன்று (மார்ச் 18 ) அதிரடியாகக் குறைந்து, நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவி வரும் சூழல் காரணமாக, கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை சரிவைச் சந்தித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.14,570-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஏழு நாட்களாகத் தொடர்ந்து விலை குறைந்து வருவது, இல்லத்தரசிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாகத் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக விலை சரிந்து வருவது பொருளாதார நிபுணர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் பெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகளில் ஏற்படவுள்ள மாற்றங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கோடும் தங்கத்தை விற்பனை செய்து வருவதுமே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது
. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து, விலை சரிவு நீடிக்கிறது. வரும் நாட்களிலும் இந்த சரிவு தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
