தமிழக சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். உதவி வேளாண்மை அலுவலர் நிஷாந்த் தலைமையிலான குழுவினர் நடத்திய இந்தச் சோதனையில், ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 111 பாத்திரங்கள் கண்டறியப்பட்டன. இந்தப் பாத்திரங்கள் ஒவ்வொன்றிலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது .
சுமார் ரூ.31,160 மதிப்புள்ள இந்தப் பாத்திரங்கள், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் (RDO) லெனின் அளித்த தகவலின் பேரில், பறக்கும் படையினர் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தவெக இளைஞரணிச் செயலாளர் மாதேஸ்வரன் என்பவருக்குத் தொடர்புடைய இடத்தில் இந்தப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதை தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிஷாந்த் தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.
