விளாத்திகுளத்தில் ப்ளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சம்மந்தந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்துள்ளது காவல்துறை. இதில் குற்றவாளி பிடிபட்டது எப்படி?
தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளத்தில் சில தினங்களுக்கு முன் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். காலை இயற்கை உபாதைக்காக சென்ற அவருக்கு இக்கொடுமை நடந்தது. முதலில் வெகு நேரமாகியும் மாணவி வீடு திரும்பாததை அடுத்து பெற்றோர் தேடிப்பார்த்துள்ளனர். இருந்தும் மாணவி கிடைக்காததையடுத்து காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். அப்போது காவல்துறை அலட்சியமாக செயல்பட்டதால் மாணவியை தேடும் பணி விரைவாக தொடங்கப்படவில்லை. அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை பெண் அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் தாமதமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதில் மாணவி சடலமாக மீட்கப்பட்டார். பிரேதப்பரிசோதனை முடிந்த பின்னரும் மாணவியின் உடலை வாங்காமல், குற்றவாளியை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என பெற்றோரும் உறவினரும் சுமார் 9 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சம்மந்தப்பட்ட குற்றவாளியை தூத்துக்குடி நீதிமன்றத்தில் வைத்து காவல்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குற்றவாளி பிடிபட்டது எப்படி? என்ற தகவலின் படி, விசாரணையில் பார்த்திபனுரை சேர்ந்த ஒருவரின் பைக்கை திருடிய குற்றவாளி அந்த பைக்கில் விளாத்திகுளம் வந்ததாக தெரிய வந்துள்ளது. பார்த்திபனூரில் பைக்கை திருடிய அந்த நபர், ராமநாதபுரம் சாயல்குடியை சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளனர். மாணவியின் நகத்தில் இருந்த தசை துணுக்கை வைத்து மேற்கொள்ளப்பட்ட DNA சோதனையில் தர்மமுனீஸ்வரன் தான் குற்றவாளி என்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று, மாணவி தனியாக காட்டுக்குள் செல்வதை பார்த்து பின்தொடர்ந்து சென்ற தர்மமுனீஸ்வரன் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுள்ளான்.
மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு வந்து சென்ற பைக்கின் பதிவு எண்ணை கொண்டும், விளாத்திகுளம் காட்டுக்குள் உள்ள காற்றாலை ஒன்றில் இருந்த சிசிடிவி கேமராவில் தர்மமுனீஸ்வரன் தப்பி செல்வது போல் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் குற்றவாளியை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே, இந்த தர்மமுனீஸ்வரன் கடந்த 2020 ஆம் ஆண்டு 60 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவன். அந்த வழக்கில் பிணையில் இருக்கும் இந்த வேலையில் இக்குற்றத்தை நிகழ்த்தியுள்ளான் என்பது தெரிய வருகிறது. தற்போது ஒரு வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வந்த தர்மமுனீஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றவாளியை கைது செய்ததை தொடர்ந்து, மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாணவியின் குடும்பத்தார் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிணையில் உள்ள ஒரு பாலியல் குற்றவாளி மீண்டும் அதேபோன்ற பாலியல் குற்றத்தில் ஈடுபட்டு மாணவியை கொலை செய்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்றவாளிகளை காவல்துறையும் சட்டமும் சிறையில் வைக்காமல் வெளியில் நடமாட விடுவது ஏன்? என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.
