தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவலநிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் வைத்துத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் இன்று தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் தந்தை – மகன் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், கொடூரமாக அடித்து துன்புறுத்தியதில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த நிலையில் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு கோர்ட் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிஐ விசாரணையில் அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் பால்துரை என10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பால்துரை 2020-ல் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தனது தீர்ப்பில் மிக முக்கியமான ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார். “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழக்கவில்லை. காவல்துறையினர் அவர்கள் மீது நடத்திய கடுமையான தாக்குதலால் ஏற்பட்ட காயங்களாலேயே இருவரும் மரணம் அடைந்துள்ளனர்” என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி முத்துக்குமரன் வாசித்த தீர்ப்பில், “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் தாக்கியதால் தான் காயம் ஏற்பட்டது என்பது விசாரணையில் நிரூபணம் ஆகியுள்ளது. இவர்களின் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. கைகளை கட்டி தொங்கவிட்டு போலீஸார் அடித்திருப்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. 200 முறைக்கும் மேல் போலீஸார் தாக்கியதாக உறவினரிடம் பென்னிக்ஸ் கூறியிருக்கிறார். இரவு முழுவதும் 10 நிமிட இடைவெளியில் போலீஸார் அடித்துள்ளனர். அடித்துப் பழக தந்தை, மகன் கிடைத்திருப்பதாகவும் போலீஸார் கிண்டல் செய்திருப்பதும் சிபிஐ அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 9 போலீஸாரும் குற்றவாளிகள் தான். தண்டனை விவரம் மார்ச் 30-ம் தேதி அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
