ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வியக்கத்தக்க திருப்பமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் உரிமையை பிரபல தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் ஆதித்ய பிர்லா குழுமம் வாங்கியுள்ளது. இதனையடுத்து, ஆர்சிபி அணியின் புதிய தலைவராக (Chairman) குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆர்யமான் பிர்லா அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு காலத்தில் அதே ஐபிஎல் களத்தில் ஒரு வீரராக நுழையப் போராடியவர், இன்று ஒரு மிகப்பெரிய அணியின் உரிமையாளராகவும் நிர்வாகியாகவும் மாறியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
ஆர்யமான் பிர்லாவின் கிரிக்கெட் பயணம் ஒரு சாதாரண வீரரைப் போலவே போராட்டங்கள் நிறைந்ததாக இருந்தது. மத்திய பிரதேச (MP) மாநில அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிய இவர், ஒரு சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகத் திகழ்ந்தார். இவரது திறமையை அங்கீகரிக்கும் வகையில், கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு ஐபிஎல் சீசன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி இவரை ஏலத்தில் எடுத்தது. இருப்பினும், நட்சத்திர வீரர்கள் நிறைந்த அந்த அணியில் இவருக்கு விளையாடும் அணியில் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. பெஞ்சிலேயே அமர வைக்கப்பட்ட விரக்தியும், மன அழுத்தம் சார்ந்த சவால்களும் இவரை ஒரு கடினமான முடிவை எடுக்கத் தூண்டின.
தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு தனது 22 வயதிலேயே கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக ஆர்யமான் அறிவித்தார். “விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், ஆட்டத்தின் மீதான காதல் குறையவில்லை” என்று அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார். இன்று பல ஆண்டுகள் கழித்து, ஒரு வீரராக சாதிக்க நினைத்த அதே ஐபிஎல் அரங்கிற்குள், ஒரு அணியின் தலைவராக கம்பீரமாக நுழைந்துள்ளார். ஆதித்ய பிர்லா குழுமத்தின் இந்த அதிரடி முதலீடு மற்றும் ஆர்யமானின் தலைமை, ஆர்சிபி அணியின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது ஆதித்யா பிர்லா மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, வலுவான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளதோடு, ஐபிஎல்-லில் மிகவும் பிரபலமான அணிகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. ஐபிஎல்-லின் முதல் பதிப்பிலிருந்தே விராட் கோலி இந்த அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு தனது முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற இந்த அணி, தற்போது ஐபிஎல் 2026-ல் தனது இரண்டாவது தொடர்ச்சியான பட்டத்தை வெல்லும் நோக்கில் உள்ளது.
