மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி இன்று (வியாழக்கிழமை, மார்ச் 26) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்லும் கப்பல்களில், இந்தியா உள்ளிட்ட ‘நட்பு நாடுகளின்’ (Friendly Nations) கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், மோதலால் பாதிக்கப்பட்ட இந்த முக்கிய கடல்வழிப் பாதை வழியாகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள ஈரானியத் துணைத் தூதரகம் தனது பதிவில், அதில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கூறியுள்ளதாவது, சீனா, ரஷ்யா, இந்தியா, ஈராக் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகச் செல்ல நாங்கள் அனுமதி அளித்துள்ளோம்.”
https://x.com/IRANinMumbai/status/2036883964854784018?
இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் மோதலில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் குறிப்பிட்ட சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள், அந்த நீரிணை வழியாகச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
ஐ.நா வலியுறுத்தல்: ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறக்க வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ‘X’ தளத்தில் பதிவிட்டதாவது: “ஹார்முஸ் ஜலசந்தி நீண்ட நாட்களாக மூடப்பட்டிருப்பது, உலகளாவிய பயிர் நடவு காலத்தின் முக்கியமான தருணத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களின் போக்குவரத்தை முடக்கியுள்ளது. இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள பொதுமக்கள் பெரும் பாதிப்புகளையும், பாதுகாப்பற்ற சூழலையும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்தப் போரின் விளைவுகளைக் குறைக்க ஐநா தொடர்ந்து பணியாற்றி வருகிறது. அந்த விளைவுகளைக் குறைப்பதற்கான மிகச்சிறந்த வழிமுறை மிகவும் தெளிவானது: போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதே அது.”
https://x.com/antonioguterres/status/2036926348074377311?
ஹோர்முஸ் ஜலசந்தி ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? ஹோர்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடங்களில் ஒன்றாகும். இது சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஈராக், பஹ்ரைன் மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிக்கு வழிவகுக்கிறது.
இந்த வழித்தடம் வழியாக கொண்டு செல்லப்படும் எரிசக்தியின் முக்கிய நுகர்வோரில் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவை அடங்கும். இந்த நாடுகள் இணைந்து, ஜலசந்தி வழியாக அனுப்பப்படும் மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயுவில் கிட்டத்தட்ட 69 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
அறிக்கைகளின்படி, இந்தியா மட்டும் தனது கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தையும், திரவ இயற்கை எரிவாயுவில் 54 சதவீதத்திற்கும் மேலையும் இந்த குறுகிய வழித்தடம் வழியாக இறக்குமதி செய்கிறது. இந்த தற்காலிக முற்றுகை ஏற்கனவே உலகளாவிய எண்ணெய் விலைகளில் கடுமையான உயர்வைத் தூண்டி, உலகெங்கிலும் உள்ள விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்துள்ளது.
